search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கோர்ட்"

    சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை ராபர்ட் வதேராவிடம் 5 நாளில் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #RobertVadra #ED
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா மீது 2 வழக்குகள் இருக்கிறது.

    லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது, ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நிலம் வாங்கியது ஆகிய 2 வழக்குகள் வதேரா மீது அமலாக்கத்துறை பதிவு செய்து உள்ளது.

    சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. டெல்லி, ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும், தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் அமலாக்கத்துறை வழங்க கோரி ராபர்ட் வதேரா டெல்லி கோர்ட்டில் கடந்த 23-ந்தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



    இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் 5 தினங்களில் ராபர்ட் வதேராவிடம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. #RobertVadra #ED
    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சஜ்ஜன் குமாரை ஒப்படைக்கும்படி டெல்லி கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது. #AntiSikhRiots #SajjanKumar
    புதுடெல்லி:

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  

    இந்நிலையில், தண்டிக்கப்பட்ட சஜ்ஜன் குமார், மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோர் இன்று டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதைதொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.



    இதற்கிடையே சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு சஜ்ஜன் குமாரை ஆஜர்படுத்தும்படி, திகார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவரை இன்று ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து சஜ்ஜன் குமாரை, வரும் 28-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டு, ஒப்படைப்பு வாரண்ட் பிறப்பித்து  நீதிபதி உத்தரவிட்டார்.

    கலவரத்தின்போது சுல்தான்புரியில் சுர்ஜித் சிங் என்ற சீக்கியரை கொன்றதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சஜ்ஜன் குமார், பிரம்மானந்த் குப்தா, வேதப் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #AntiSikhRiots #SajjanKumar

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் டெல்லி முன்னாள் தலைவர் சஜ்ஜன் குமார் இன்று ஆஜரானார். #AntiSikhRiotsCase #SajjanKumar
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது.  இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இது தொடர்பான ஒரு வழக்கில் இருந்து முன்னர்  நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சஜ்ஜன் குமார் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.



    இந்நிலையில் சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணைக்காக சஜ்ஜன் குமார் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி தனது செல்போனை ஒப்படைத்தார். ஆனால் சஜ்ஜன் குமாரின் பிரதான வழக்கறிஞர் ஆஜராகாததால், விசாரணை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    கலவரத்தின்போது சுல்தான்புரியில் சுர்ஜித் சிங் என்ற சீக்கியரை கொன்றதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சஜ்ஜன் குமார், பிரம்மானந்த் குப்தா, வேதப் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகள் முன்னர் முடித்து வைக்கப்பட்டன. இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

    இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட், மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கும்படி உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. #AntiSikhRiotsCase #SajjanKumar
    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி 26-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #DoubleLeafCase
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணை நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்பு) அருண் பரத்வாஜ் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை தொடங்கியதும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பி.குமார் தரப்பில், தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 29-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உள்ளதாக கூறி, அது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் நகல் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜூனா, பி.குமார் ஆகியோர் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்கள் வருகிற பிப்ரவரி 21-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருவதாகவும், அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற பிப்ரவரி 26-ந் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார். #DoubleLeafCase
    சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான மறுவிசாரணையை டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்த டெல்லி கோர்ட் சில முக்கிய ஆவணங்களை சசி தரூருக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. #ShashiTharoor #SunandaPushkar
    புதுடெல்லி:

    மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர்(61), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.

    ஆனால், திடீரென சசிதரூருடன் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்-சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.



    இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

    இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.

    சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

    சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் தன்னிடம் அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் சசி தரூர் முறையிட்டிருந்தார். மேலும் இவ்வழக்கில் சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ள சில மின்னணு தகவல்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான சில முக்கிய ஆவணங்களை சசி தரூருக்கு அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி சமர் விஷால் மறுவிசாரணையை டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்தார். #ShashiTharoor #SunandaPushkar #SunandaPushkardeath
    சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது கணவரான சசி தரூர் எம்.பி.க்குக்கு சம்மன் அனுப்பப்படுமா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சசி தரூர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

    இவ்வழக்கை விசாரித்த டெல்லி போலீஸ், சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த 14-ம் தேதி டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் சசி தரூர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாகவும் கூறியிருந்தது.

    இது தொடர்பாக கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு மற்றும் சசி தரூர் தரப்பு வாதங்கள் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சமர் விஷால் அறிவித்துள்ளார். எனவே, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், சசி தரூருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடுவாரா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
    ×